கண்ணப்பர் வரலாறு

கண்ணப்ப நாயனார் 63 நாயன்மார்களுள் ஒருவர். இவரது தந்தை நாகர், பொத்தப்பி என்னும் மலைநாட்டில் உடுப்பூர் என்னும் ஊரில் வேடர் குலத் தலைவனாக இருந்தார். இவரைக் கையில் ஏந்தும் போது திண் என இவர் இருந்ததால் இவருக்குத் திண்ணன் எனும் பெயரைச் சூட்டினர். திண்ணனுக்குத் திண்ணப்பன் மற்றும் கண்ணப்பன் எனும் வேறு பெயர்களும் உண்டு. இவரது தாயாரின் பெயர் தத்தை. திண்ணன் தம்முடைய குழந்தைப் பருவத்திலிருந்தேய உடல்வலிமை உடையவராக இருந்தார்.இவர் சிறு வயது முதலே காட்டு மிருகங்களுடனும் பாம்புகளுடனனும் விளையாடி மகிழ்வார். இவர் தன்னுடைய 16ஆவது வயதை எட்டியவுடன் ஒரு நல்ல நாள் பார்த்து வேட்டையாடும் கலையை இவரது தந்தை இவருக்குக் கற்பித்தார். அதன்பின் நாகனுக்கும் வயதாகவே திண்ணன் வேடர்குலத் தலைவனாகப் பொறுப்பேற்றார்.
ஒருநாள் அதிகாலையில் வேட்டைக்குச்
செல்லும்போது வேடர்கள் வைத்திருந்த குழியிலிருந்தும் வலையில் இருந்தும் ஒரு காட்டுப்பன்றி தப்பித்து ஓடுவதைத் திண்ணனும் அவரது நண்பர்களும் (காடன் மற்றும் நாணன்)கண்டனர். அந்தக் காட்டுப் பன்றியின் வேகத்திற்கு ஈடு கொடுத்து அவர்கள் அதன் பின்னே துரத்திச் சென்றனர். அந்தக் காட்டுப் பன்றி திருக்காளத்தி மலை அடிவாரத்தில் ஓடிச் சென்று பதுங்கி நின்றது. அங்குச் சென்று அந்தக் காட்டு பன்றியை திண்ணன் அம்பெய்து வீழ்த்தினார். அவர்கள் மூவரும் பசியோடு இருந்ததால் திண்ணன் (கண்ணப்பன) அந்தப் பன்றியை காடனிடம் கொடுத்துச் சமைக்கச் சொன்னார். தண்ணீர் தாகம் எடுக்கவே கண்ணப்பனும் நாணனும் தண்ணீர் மொள்ள அருகிலிருக்கும் முகலி ஆற்றுக்குச் சென்றனர். அவர்கள் காட்டைக் கடந்து செல்ல நேர்ந்த போது கண்ணப்பன் அங்கே ஓங்கி உயர்ந்திருந்த திருக்காளத்தி மலையைக் கண்டு பரவசம் அடைந்தார். அவரது முற்பிறப்பு நற்செயல் பலன்கள் அவரை அந்த மலைக்கு அழைத்துச் சென்றன. மலைக்கு மேல் சென்று மலை உச்சியில் இருக்கும் குடுமித்தேவர் (சிவன்)ஆலயத்தைத் திண்ணன் கண்டார். அங்குச் சிவபெருமான் சுயம்புவாக அவதரித்து இருப்பதைக்கண்டு தன்னைப்பற்றிய அனைத்தையும் மறந்து இறைவனால் ஆட்கொள்ளப்பட்டவராய் திண்ணன் (கண்ணப்பன்) அந்தச் சிவலிங்கத்தை ஓடிச்சென்று கட்டிப்பிடித்து மகிழ்ச்சியுற்றார். மேலும் இந்தக் காட்டில் சிவனுக்கு உணவளிப்பது யார்? சிவன் காக்க ஆளில்லாது தனியாக இருக்கின்றாரோ? அவருக்குத் துணையாக யாருமே இல்லையே! என்று எண்ணிக் கண்ணீர் வடித்தார். பிறகு சிவலிங்கத்தைச் சுற்றிப் பார்த்தப் போது அங்கே பூக்கள் வைத்து யாரோ பூசை செய்து இருப்பதைக் கண்டார். "இது யாராக இருக்கும்?" என்று நாணனிடம் அவர் வினவினார். அதற்கு நாணன் ஒருமுறை வேட்டையாட அவர் வரும்போது அந்தணர் ஒருவர் (சிவகோச்சாரியார்) சிவலிங்கத்திற்கு முழுக்கு (அபிஷேகம்) செய்து கொண்டிருப்பதைக் கண்டதாகக் கூறினார். சிவன் பசியோடு இருப்பார் அவருக்கு உணவு அளிக்க வேண்டும் என்று எண்ணிய திண்ணப்பன் (திண்ணன்) மாலையிலிருந்து விரைந்து இறங்கி காடனிடம் சென்று அவர்களுக்காகச் சமைத்து இருந்த அந்தப் பன்றி இறைச்சியைக் கேட்டார். அந்தப் பன்றி இறைச்சியிலும் தான் சிறிது உண்டு பார்த்து எந்த இறைச்சியின் பகுதியில் சுவையாக உள்ளதோ அதனை மட்டுமே அவர் சிவனுக்குப் படைக்கப் போவதாகக் கூறினார். இதனைச் சிவபெருமானுக்கு உணவாக அளிக்கப் போவதாகக் கூறுவதைக் கேட்ட காடனும் நாணனும் "இவன் பித்தன் போல உளறுகிறானே எப்படி எச்சில் செய்தப் பொருளை சிவனுக்குப் படைப்பான் ?" என்று அவர்களுக்குள் முணுமுணுத்தனர். பின் அவர்களிடம் திண்ணப்பன் தான் வேடன் தொழிலைக் கைவிடப் போவதாகவும் எந்நேரமும் சிவனுக்குத் தொண்டாற்றி அவரின் அடிமையாக இருக்கப் போவதாகவும் கூறினார். இதனைக் கேட்ட காடனும் நாணனும் அதிர்ச்சியுற்றனர். கண்ணப்பன் வாயில் சிறிது தண்ணீரை பிடித்து வைத்துக் கொண்டு சிவனுக்குச் சூட வேண்டிய பூக்களைத் தன் தலையில் வைத்துக் கொண்டு கையில் இறைச்சியைக் வைத்துக் கொண்டு மலைக்குச் சென்றான். அவன் வாயில் பிடித்து வைத்திருந்த தண்ணீரை சிவன் மீது துப்பி அவருக்கு (முழுக்கு) அபிசேகம்ம் செய்துவிட்டு அவன் தலையில் வைத்திருந்த பூவை சிவனுக்குச் சூடினான். பின் தன் கையிலிருந்த இறைச்சியைச் சிவனுக்குப் படைத்தான். பின் இரவு முழுவதும் சிவன் தனியாக இருப்பாரோ ? சிவனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது ?என்று எண்ணி அஞ்சி இரவு முழுவதும் சிவனுக்குத் துணையாக அங்கேயே இருந்தான். காலை விடிந்தவுடன் மீண்டும் உணவு தேடி சிவனுக்குப் படைப்பதற்காகச் சென்றான். இவன் சிவன் கோயிலை விட்டு சென்ற அந்த நேரத்தில் சிவகோச்சாரியார் அங்கே வந்து சிவனுக்கு இறைச்சி உணவாகப் படைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு மிகவும் வருத்தமுற்று அதனைச் சுத்தம் செய்துவிட்டு சிவனுக்கு அபிசேகம் (முழுக்கு)செய்து அங்கிருந்துக் கிளம்பினார். திண்ணப்பன் மீண்டும் இறைச்சியைச் சமைத்து அதேபோல் உண்டுப் பார்த்து வாயில் நீரைப் பிடித்து வைத்துக்கொண்டு தலையில் தூக்கி வைத்துக் கொண்டு மலையேறி இறைவனுக்கு வாயில் இருந்த தண்ணீரை வைத்து அபிஷேகம் செய்து தன் தலையில் ஏந்தி வந்த பூக்களைச் சிவனுக்குச் சூடி விட்டுத் தன் கையிலிருந்த (மாமிசத்தை) இறைச்சியைச் சிவனுக்குப் படைத்தார். அன்றும் அதே போல் கண் அயராது சிவனுக்குப் பாதுகாப்பாக இருந்தார். மீண்டும் இதேபோல் அடுத்த நாளும் சிவகோச்சாரியார் அதே நேரத்தில் வர அங்கு இறைச்சி சிவனுக்குப் படைக்கப் பட்டிருப்பது கண்டு மனம் நொந்து "இறைவா இத்தகைய தவறு செய்தவர் அந்த வேடர் குலத்தவராகத் தான் இருக்க வேண்டும் அவரைத் தண்டித்து விடு" என்று வேதனையோடு வேண்டினார். அன்றைய இரவு சிவகோச்சாரியாரின் கனவில் சிவன் தோன்றி "கண்ணப்பன் தன் மீது கொண்டிருக்கும் அன்பே உயர்ந்த அன்பு என்றும் அவன் தன் வாயிலிருந்து துப்பும் தண்ணீர் கங்கையை விட மிகவும் புனிதமான நீர்" என்றும் கூறினார். மேலும் கண்ணப்பனின் பக்தியை சிவகோச்சாரியாருக்கு கண்ணப்பனின் அன்பைப் புரியவைக்க நாளை கண்ணப்பன் வரும் வேளையில் சிவ கோச்சாரியாரை மறைந்து இருக்கும் படி கூறினார். அதேபோல அடுத்த நாள் சிவகோசரியார் மறைந்து நிற்க கண்ணப்பன் அதேபோன்று இறைச்சியைச் சிவனுக்குக் கொண்டு வந்தான். திண்ணன் சிவன் ஆலயத்தை அடைந்த போது சிவனது கண்ணிலிருந்து குருதி வழிவதைக் கண்ணப்பன் கண்டார். இதற்குக் காரணம் யாராக இருக்கும்? என்று கோயிலை அங்குமிங்கும் சுற்றிப் பார்த்துக் கோபப்பட்டான். சிவனின் கண்ணிலிருந்து வழியும் குருதியைக் கண்டு மனம் நொந்து அழுதார். காட்டிலிருந்து பச்சிலைகளைப் பறித்து வந்து மருந்து செய்து சிவனின் கண்ணில் தடவிப் பார்த்தான். அப்போதும் குருதி வழிந்துகொண்டிருந்தது. திடீரென்று கண்ணப்பனுக்கு ஒரு யோசனை வரவே தன் கண்ணைப் பிடிங்கி சிவனின் எந்தக் கண்ணில் குருதி வருகின்றதோ அந்த இடத்தில் தன்னுடைய கண்ணை அப்பினான்.குருதி வழிவது நின்றது இதனைக் கண்டு கண்ணப்பன்
மகிழ்ச்சி அடைந்தார்.
திடீரென்று சிவபெருமானின் மற்றொரு கண்ணிலிருந்து குருதி வழியத் துவங்கியது. இதனைக் கண்ட திண்ணன் தன்னுடைய இன்னொரு கண்ணையும் பிடுங்கி இறைவனுக்குக் கொடுத்துவிடலாம்
என்று எண்ணினான். ஆனால் "இரு கண்களைப் பிடுங்கி விட்டால் தனக்குக் கண் பார்வைத் தெரியாது! எப்படி இறைவனுக்குச் சரியான இடத்தில் தன் கண்ணை வைப்பது? "என்று எண்ணி இறைவனின் கண் எங்கு உள்ளதோ அங்கே தன் இடது காலின் கட்டை விரலைத் தூக்கிக் கண் எங்கு உள்ளதோ அதற்கு அடையாளமாக வைத்தான். பின் தன்னுடைய கண்ணைப் பிடுங்கச் சென்றான். அப்போது சிவபெருமான் அவர் முன் தோன்றி "கண்ணப்பா நில்! உனது அன்பே உலக அன்புகள் அனைத்திலும் சிறந்த அன்பு" எனவும் "நீ என் வலப்பக்கம் இருக்கக் கடவாய் என்றும்" அவரது பக்தியை மெச்சினார். மேலும் அவன் கண்ணை அவருக்கே திருப்பித் தந்தார். சிவகோச்சாரியார் இந்த நிகழ்வின் வழி கண்ணப்பன் சிவனின் மீது வைத்திருக்கும் பக்தியை உணர்ந்தார். மேலும் கண்ணப்பன் சிவனுக்கு இறைச்சியைப் படைக்கவில்லை அந்த இறைச்சியில் உள்ள தன்னுடைய அன்பைப் படைத்து இருக்கிறான் என்பதையும் உணர்ந்தார்.



பின்குறிப்பு:
திண்ணன் என்பது கண்ணப்பனின் இயற்பெயர் இவருக்குக் கண்ணப்பன் எனப் பெயர் வரக் காரணம் தனக்கு அனைத்திலும் மேலான கடவுளின் கண்களிலிருந்து குருதி வடிவதைப் பொறுத்துக் கொள்ளாது தன் கண்களைப் பிடுங்கி அப்பியதாலே.

வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களையும் ஐயங்களையும் கருத்துரை  இடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்


கருத்துகள்

  1. தாங்கள் இது போன்று தொடர்ந்து எழுத என்னுடைய வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக